|  ஆகாயம் ஆனந்தமாய் பொழிந்த
அடைமழை நாளொன்றில் கொஞ்சம் நனைந்து நீயும் கொஞ்சம் நனையாமல் நானும் ஒரே குடையில் நாமிருவரும் குடைக்குள் மொத்தமாய் நனைந்திருந்தது நம் காதல்...
ஐந்து வயது சிறுவனின் ஐந்து வருட தவத்திற்குக் கிடைத்த வரம் நீ...? ஆம், நான் பிறந்து ஐந்து வருடத்திற்குப் பிறகு தானே நீ பிறந்தாய்....
ஐந்து நிமிடம் காத்திருந்ததற்காக என் மேல் கோபப்படுகிறாய் நான் கூடத்தான் பிறந்து ஐந்து வருடங்களாக உன் பிறப்பிற்காகக் காத்திருந்தேன் அதற்காக ஏன் இவ்வளவு தாமதமாகப் பிறந்தாயென்று உன் மேல் கோபப்படவா முடியும்...?
ஏழு வண்ணத்திலும் வெட்கப்படும் வானவில் நீ என் கைகளின் அணைப்பிற்குள் இருக்கும் போது மட்டும் எட்டாவது வண்ணத்திலும் வெட்கப் படுகிறாய்...
எத்தனை முறை சொன்னாலும் கேட்பதே இல்லை உன் விரலையாவது தொட்டுவிட்டுத்தான் போவேன் என்று அடம்பிடிக்கிறது இந்த மழைத்துளி அதற்கும் என்னை போல் பிடிவாதம் கொஞ்சம் அதிகம் தான்...
மழையில் நனைந்தபடி யாருமற்ற புல்வெளியில் என் கைப்பிடித்து நடந்தாயே அன்று போல் என்றும் உணர்ந்ததில்லை நிறைவான நம் காதலை...
துளி மழை தூரல் மழை சாரல் மழை அடை மழை ஆலங்கட்டி மழை ஏன் அமில மழை கூடப் பார்த்திருக்கிறதாம்... உன் பாதம் பட்டதில் தான் முதன் முதலாய் அமிர்த மழை பார்க்கப் போவதாய் பெருமை பட்டுக்கொள்கிறது இந்த பூமி....
சட்டெனப் பொழியும் முத்த மழையின் போது உன் மின்னல் வெட்கத்தில் என் கண்களும் சேர்ந்தே மூடிக் கொள்கின்றன இப்போது தான் புரிகிறது முத்தமிடும் போது ஏன்...? கண்கள் தாமாகவே மூடிக்கொள்கின்றனவென்று...
மழை நின்ற பின்னும் தொடரும் மண்வாசம் போல் நீ விலகிச் சென்ற பின்னும் விலகாமல் என்னைத் தொடர்கிறது உன் வாசம்...
Posted by புதியவன் |
No comments:
Post a Comment